Description
வெகுஜன மாத இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தொழில் ரீதியாக தான் கண்டவற்றை 27 தலைப்புகளில் கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்.
பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரியும் நிலையில், பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர்; குடிகாரக் கணவனால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம்; வயதான தாய்-தந்தையை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்; தற்கொலை செய்து கொள்ள நினைப்போர்; தாய்-தந்தை பேச்சைக் கேட்டு கணவனை விட்டுப் பிரியும் பெண்களின் நிலைமை; கட்டாயத் திருமணம்; பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை வைத்துவிட்டு பின் அது தவறு என வருந்தும் பெற்றோரின் மனநிலைமை - இப்படி சமூகத்தில் அரங்கேறி வரும் சில அவலங்களை, சகிக்க முடியாத விஷயங்களை, பிரச்னைகளை முன்வைக்கிறது இந்நூல்.
பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகள் குறித்து கூறுமிடத்து, 'நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை வைத்து உங்களைப் புரிந்து கொள்ளாத பிள்ளைகளுக்கு உங்கள் சொத்தை எழுதிக் கொடுத்தா உங்களை நிரூபித்துவிடப் போகிறீர்கள்' என்பது சரியான சாட்டையடி.
திருமணம், கொலை, குற்றம், விவாகரத்து, துரோகம் போன்றவற்றை மையமாகக் கொண்ட இந்நூல் துக்கம், துயரம், கோபம், கொந்தளிப்பு, பரிதாபம், ஏமாற்றம், சமுதாய அக்கறை என அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும், சமாதான வழக்குகள், ஆட்கொணர்வு மனு, திருமணச் சட்டம், வரதட்சிணைக் கொடுமை, குடும்ப நீதிமன்றம், மைனர் திருமணம், ஜீவனாம்சம் ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகளையும், விளக்கத்தையும் தந்திருப்பதைப் பாராட்டலாம்.