Description
உடலில் உயிர் இருக்கும்வரை உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. அதுபோலத்தான் மன நலப் பாதிப்பும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் குறையுள்ளவர்கள்தான் என்கிறது மருத்துவத் துறை. ஒருவரது மனநிலை, பேச்சு, நடத்தை முதலியன பிறருக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தொடர்ந்து அளிக்கும்பட்சத்தில் அவருக்கு மன நலச் சிகிச்சை தேவை.
மன நலச் சிகிச்சை குறித்த பல்வேறு அம்சங்களை 60 அத்தியாயங்களில் மிகவும் நுணுக்கமாக எளிய தமிழில் இந்த நூல் விளக்குகிறது. மருந்துகளைத் தவிர்த்து, மன நோயாளிகளுக்கு முறையான ஆலோசனை, அன்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவற்றை வழங்குவது சைக்கோதெரபியின் சிறப்பம்சம். இந்தச் சிகிச்சை முறையை மன நோய் மருத்துவர்களும் அறிந்துள்ளனர். ஆனால் பெருகிவரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மணிக்கணக்கில் நோயாளிகளுடன் மனம்விட்டு பேச வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் சைக்கோதெரபிஸ்டின் பங்கும் இந்தச் சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு மனநோய் மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சைக்கோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதுதான் முறையானது என இந்த நூல் குறிப்பிடுகிறது.
மூளைக்குள் இருக்கும் சூட்சுமப் பகுதியான மனதின் பல்வேறு பரிமாணங்களையும் அதில் ஏற்படும் பாதிப்பு, தீர்வுகளையும் பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பு.