Description
மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார்.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்துத்தான் தற்போது மதுரையின் முக்கிய வீதிகள் அமைந்துள்ளன. மதுரைக்காஞ்சியில் அப்படிப்பட்ட நிலை இருப்பது தெளிவாக்கப்படவில்லை என நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
மதுரையில் மன்னனுக்கு ஆலோசனை கூறும் காவிதி மாக்கள் எனும் அமைச்சர்களும், நாற்பெருங்குழு அமைப்பும் இருந்துள்ளதையும் மதுரைக்காஞ்சி பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.
மதுரையில் பெளத்த பள்ளிகள், சமணர் இருப்பிடங்கள், வைதீக நெறி நிற்கும் அந்தணர்கள் போன்றோர் அவரவர் சமய நெறிப்படி வாழ்ந்ததையும் நூலாசிரியர் அக்காலகட்ட புலவர்களின் பாடல்கள் மூலம் விளக்கியுள்ளார்.
மொத்தமுள்ள எட்டுத்தலைப்புகளில் ஏழு தலைப்புக் கட்டுரைகளில் முழுக்க முழுக்க மதுரைக்காஞ்சியை ஆய்வுக்கு உள்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.