Description
கிபி 1700 தொடங்கி 1840 வரை 140 ஆண்டுகால உலக, இந்திய, தமிழக வரலாற்றை இந்தத் தொகுப்பில் அவர் எழுதியுள்ளார். பத்தாண்டு வரலாறுக்கு ஒரு தொகுப்பு என்று மொத்தம் 15 தொகுப்புகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த 15 தொகுப்புகளையும் எட்டு தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளது அகநி பதிப்பகம். 1700&லிருந்து ஆண்டு வரிசைப்படி நடந்த சம்பவங்களை அவர் தொகுத்துள்ளார். சிவனடி எழுத விரும்பியது என்னவோ 1700க்குப் பிறகான வரலாறுதான். ஆனால் உலக வரலாற்றையே முழுவதுமாக எழுதிக் குவித்துவிட்டார். முதல் தொகுதியில் பேரண்ட பெருவெடிப் பில் தொடங்கி, சிவ தாண்டவம், பிரம்மன், பரிணாம வளர்ச்சி, உயிர்களின் படைப்பு பற்றி உலக நாகரிகங்களில் விளங்கும் கதைகள், சிந்துவெளி நாகரிகம், புத்தர் என்று தொடர்ந்து மூச்சை அடைக்கவைக்கும் விதத்தில் அட்சரம் பிசகாமல் பதினேழாம் நூற்றாண்டு வரை சுமார் நூறு பக்கங்களில் உலக இந்திய, தமிழக வரலாற்றை அடுக்கிவைத்து பின்னர்தான் 1701&ல் நடந்தது என்ன என்று சொல்லத் தொடங்குகிறார். இதில் இடையே இஸ்லாம் இந்தியாவுக்குள் வந்தது, டெல்லியை ஆண்ட இஸ்லாம் மன்னர்கள் கதை என்று அவர்களின் வரலாற்றை எழுதிய வெளி நாட்டு அறிஞர்களின் நூல்களில் இருந்தெல்லாம் குறிப்புகளை எடுத்தாண்டு காண்பிக்கிறார் ஷாஜகானுக்கும் அவரது மகள் ஜஹானாராவுக்கும் இடையே இருந்த உறவு, ஔரங்கசீப் அவரை சிறையில் அடைத்தபோது ஜஹானாராதான் ஷாஜகானுடன் இருந்து கவனித்துக்கொண்டார் என பல நுண்ணிய தகவல்கள்கூட கவனிக்கப்பட்டு இதில் இடம் பெற்றுள்ளன. இது ஓர் உதாரணம் மட்டுமே. வரலாற்றை வெறும் ஆண்டுகளாக தகவல்களாகப் பார்க்காமல் சுவாரசியமாக கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார் சிவனடி.