Description
இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள், கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்டபோது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேசவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.உருதும் அரபும் ஆட்சிமொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து, அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக்கொண்டது நடந்தேறியது.வரலாற்றின் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டோம்? தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது? சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மௌனம் மட்டுமே!