Description
தமிழ் சினிமாவின் என்றுமே உதிராத பூ, இயக்குநர் மகேந்திரன். அவரது உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் வருங்கால, நிகழ்கால இயக்குநர்களை வழிநடத்தும் கலைப் புத்தகங்கள்.ஒரு கற்பனைக் கதையை யதார்த்த பாணியில் படம் ஆக்குவது என்ற மகேந்திரனின் விதைதான் இன்று பல்வேறு வெற்றிப் படங்களின் விருட்சமாக ஆகி இருக்கிறது. வசனத்தை மென்மையாக ஆக்கி காட்சிப்படுத்துதலை அதிகமாய் பயன்படுத்திய மகேந்திரனுள் எப்போதும் ஒரு எழுத்தாளன் பயணப்பட்டே வந்துள்ளான். அதனால்தான் ஆரம்ப காலத்தில் துக்ளக் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். இன்றும் தன்னுடைய எண்ணங்களை தொடர்ந்து எழுதுவதையும் தயங்காமல் தொடர்ந்து வருகிறார்.அவரது படங்களைபோலவே அவரது எழுத்தும் இயல்பாக இருக்கிறது. மென்மைக்குள் ஒரு வன்மை இருக்கும் அல்லவா? அது இந்த எழுத்துக்களிலும் உள்ளது.எங்கள் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் எல்லாம் தற்சமயம் என்ன பாடுபடுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்தக் காதலர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் இவரோ, சினிமாவில் ஒன்றுக்கு மூன்று டூயட் பாடிக்கொண்டு காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடியாடிக் காதலிக்கிறார். இவர் காதலிப்பதைப் பார்த்து சினிமாவிலி எந்த பிரின்ஸ்பாலும் கண்டுகொள்வதில்லை, கண்டிப்பதுமில்லை, ஊர்க்காரர்கள் இவர்கள் காதலைப் பொருட்படுத்துவதில்லை என்று தன்னுடைய கல்லூரிக்கு வந்திருந்த எம்.ஜி.ஆரைக் கையை நீட்டிக் காட்டியபடியே பேசினார்.1958ல் இது நடந்தது. எம்.ஜி.ஆரை விமர்சித்து அப்படி பேச முடியுமா? பேசினார். எம்.ஜி.ஆரும் ரசித்தார். மாணவர்களைக் கைதட்டச் சொன்னார். ஒரு தாளை கேட்டு வாங்கி, சிறந்த விமர்சகராகத் தகுந்தவர் வாழ்க என்று எழுதிக் கொடுத்தார். பின்னர் மகேந்திரனே சினிமாவுக்குள் வந்தார்.மாறாத கலைக் காவியங்களைக் கொடுத்த மகேந்திரன் இப்போதும் சொல்கிறார் எதெல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடாது என்று அன்று நான் விமர்சித்தேனோ அதையேதான் நான் இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறேன். உண்மைக் கலைஞன் உண்மையைத்தானே பேசுவான் என்பதற்கு உதாரணம் மகேந்திரன்.யாரையும் காயப்படுத்தாமல், எல்லோரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களைப் பேசுவதே மகேந்திரனின் மனசு. அவரிடம் மலர்கள் உள்ளன. முள் இல்லை.தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும் இளம் தலைமுறையினர் பலருக்கும் சினிமாவின் மீதுள்ள ஆர்வம் மட்டுமே மூலதனமாக இருககிறது. அதையும் தாண்டி சினிமா குறித்து அவர்களுக்கு அதிகமாக எதுவும் தெரிவதில்லை என்று வருத்தப்படுகிறார் மகேந்திரன். எதையெல்லாம் இந்த இளம்தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகத்தைக் கொடுத்துள்ளார் மகேந்திரன்.