Description
ஏவி.எம். சரவணன் எழுதிய 'நானும் சினிமாவும்' சிறந்த படங்களைத் தயாரித்து, தமிழ் சினிமாவின் அந்தஸ்தையும், பெருமையையும் அகில இந்திய அளவுக்கு உயர்த்தியவர் ஏவி.மெய்யப்ப செட்டியார். ஏவி.எம். தயாரித்த முதல் படமான 'நாம் இருவர்', தமிழ்நாட்டில் புராணப் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூகப் படங்களைத் தயாரிக்க வழி வகுத்தது. 'நாம் இருவர்' படத்தை பார்த்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், 'நாம் இருவர் பார்த்தேன். அப்படியே பிரமித்துப் போனேன்' என்று மெய்யப்ப செட்டியாருக்கு கடிதம் எழுதினார். ஏவி.எம். படங்கள் தொடர் வெற்றி பெற என்ன காரணம்? தனக்கு முழு திருப்தி ஏற்படும் வரை ஏவி.எம். படத்தை ரிலீஸ் செய்யமாட்டார். பணத்தைப்பற்றி கவலைப்படாமல், 5 ஆயிரம் அடி அல்லது 6 ஆயிரம் அடி படத்தை மீண்டும் எடுப்பார். பூரண திருப்தி ஏற்பட்ட பிறகுதான் படத்தை வெளியிடுவார். 30 வயது ஆன முதிர் கன்னிகளும், இரண்டு மூன்று குழந்தை பெற்றவர்களும் கதாநாயகிகளாக நடித்து வந்த காலகட்டத்தில், 17 வயது வைஜயந்தி மாலாவை, 'தமிழ்ப்பட உலகுக்கு ஏவி.எம். பெருமையுடன் வழங்கும் வைஜயந்தி மாலா நடிக்கும் வாழ்க்கை' என்று அறிமுகப்படுத்தினார். சிவாஜிகணேசன் 'பராசக்தி' மூலம் ஏற்படுத்திய பரபரப்பை, அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே 'வாழ்க்கை' மூலம் உண்டாக்கியவர் வைஜயந்திமாலா. இந்த ஒரே படத்தின் மூலம் அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்தார்.