Description
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம்.
வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல்.
தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு.
தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.
இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது.
- ஏர் மகாராசன்