Description
சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’
‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும் முதல்கட்டுரையில் சந்திராயன்-1 வெற்றிகரமாகச் செயல்பட்டதை விவரிக்கின்றார் விஞ்ஞானி அண்ணாதுரை அவர்கள். உலகில் பல நாடுகள் 69-முறை நிலவை ஆராய்ந்துவிட்டு அங்கு நீரில்லை, காற்றில்லை என்று கூறி ஓய்ந்துவிட்ட நேரம், நிலவின் துருவப்பகுதியில் ஆய்வு நடத்தி ~நிலவில் நீருண்டு’ என்று நிரூபித்ததால் தான் உலகின் பார்வையில் இந்தியாவின் சந்திராயன்-1 புகழ் பெற்று நிற்கிறது. தொடர்ந்து பல நாடுகள் பல முறை செவ்வாய் கிரகத்தில் செலுத்திய விண்கலன்கள் தோல்விகண்டு நின்ற போது, முதல் முறையிலேயே மங்கள்யானை வெற்றிகரமாகச் செலுத்திய தேசமாக இந்தியா திகழ்ந்ததையும் சிறப்பாகச் சொல்லியுள்ளார் விஞ்ஞானி அண்ணாதுரை அவர்கள். இந்த இரண்டு திட்டங்களின் தலைவராக இருந்து வழிகாட்டிய அவரே எழுதியுள்ள இந்நூல் சிறப்பான தகவல்களைத் தருகின்றது.