Description
விஜயதசமியன்று 2014 அக். 3-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியின் "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சி ஒலிபரப்புத் தொடங்கியது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று வானொலியில் உரையாற்றும் நிகழ்ச்சியானது, 87-ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. இதில் 85 உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 5 தொகுப்புகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஆவணப் பெட்டகமே.
உரையாடலில் பல்வேறு, தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் தமிழகத்தைப் பற்றியும், தமிழ் கலாசாரத்தைப் பற்றியும் ஒவ்வொரு உரையாடலிலும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. அதிலும் திருக்குறள், பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் ஆற்றிய உரை, தமிழின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றியிருக்கிறது எனலாம்.
அவரது ஒவ்வொரு மாத உரையாடலிலும் பாரதம் வல்லரசாக, சர்வதேச அளவில் மதிப்பு - அந்தஸ்து பெறுவதில், நாட்டில் ஏழ்மை, பசி, பட்டினி இல்லா நிலையை எட்டுவதில் அனைவரின் பங்கு அவசியம் என்பதை கோடிட்டுக் காட்ட பிரதமர் தவறவில்லை.
முதல் உரையாடல் நாளில், ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள பத்து தீயவைகளை அகற்றும் மன உறுதியை ஏற்க வேண்டும் என்று கோரி, அவருக்கு வந்த மின்னஞ்சல் குறித்து எடுத்துரைத்து ஒவ்வொருவரும் தங்கள் மனத்தில் உள்ள தீமைகளை வென்று வாகைசூட அறைகூவல் விடுத்தது மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு. மொத்தத்தில் புத்தக விமர்சனம் என்பதைவிட, பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் விமர்சனமாகத்தான் இதைக் கருதத் தோன்றுகிறது.