Description
நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோயைப் பற்றிய புரிதலை பாமரர்களுக்கும் ஏற்படுத்தும் வகையிலானதொரு நூல் இது. நரம்பியல் துறையின் முதன்மையான மருத்துவ நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ் எழுதியிருக்கும் நூல் இது என்பதே அதன் கூடுதல் சிறப்பு. மருத்துவத் துறையில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பல பிரபல மருத்துவர்களின் ஆசானாக உள்ள தனராஜ், இந்தப் புத்தகத்தின் வாயிலாக எளிய வாசகர்களுக்கும் நடுக்குவாதம் குறித்து வகுப்பு எடுத்திருக்கிறார்.
1817-இல் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் பார்கின்சன் என்ற மருத்துவரால் கண்டறியப்பட்டதுதான் நடுக்குவாதம் என வரலாறு கூறினாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய மருத்துவ முறைகளில் இதற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகக் கூறி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் மூளைச் சிதைவுதான் நடுக்குவாதம். முதலில் ஒரு விரலில் நடுக்கம் வரலாம். பிறகு அது கைகளுக்கும், உடல் முழுவதுக்கும் பரவலாம். நடையில் தடுமாற்றம், நினைவு இழப்பு என பல்வேறு அறிகுறிகள் அதற்கு உள்ளதாகக் கூறும் டாக்டர் தனராஜ், அதனை உதாசீனப்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுகளையும் கூறி எச்சரிக்கிறார்.
வயோதிகர்களுக்கு மட்டுமல்லாது 40 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் பார்கின்சன்ஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது மருத்துவத் தரவுகளின் மூலம் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பார்கின்சன்ஸ் நோயாளிகளில் 5 சதவீதம் பேர் இளம் வயதினர் என்பதால், அதுகுறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு அவசியம் என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது.
பார்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் என்ன, மருத்துவ வழிகாட்டுதல்கள் என்ன, பக்கவிளைவுகள் என்ன என்பதை பட்டியலிடும் இது வழக்கமானதொரு புத்தகம் மட்டுமல்ல; ஐம்பது வயதைக் கடந்த அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆரோக்கிய கையேடு .