Description
உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றியவர் வெ. சாமிநாத சர்மா' என்றார் கண்ணதாசன். வரலாறு, அறிவியல், புவியியல், இலக்கியம் என்று எட்டுத் திக்கிலு மிருந்து செல்வங்களை அள்ளிக் கொண்டுவந்து தமிழ் வாசகனிடம் சேர்த்தவர் அவர்.
சாமிநாத சர்மாவின் நூல்களுள் குறிப்பிடத்தக்கது சீனாவின் வரலாறு', ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய தொன்மங்களிலிருந்தே இந்த நூல் ஆரம்பமாகி விடுகிறது. கிறிஸ்து விற்கு 2200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது பரம்பரைப் பேரரசுகளின் காலம். அவற்றின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பொற்காலங்களையும் இருண்ட காலங்களையும் காய்தல் உவத்தல் இன்றி சொல்லிச் செல்கிறது இந்த நூல். அந்நிய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பையும் அவர்தம் சமச்சீரற்ற வணிக ஒப்பந்தங்களையும் அபினியின் பேரால் நடந்த போர்களையும் சொல்லி, அழித்தும் அழிபடாத தேசமாக விளங்கியது சீனா என்கிறார் சாமிநாத சர்மா, 1912- ல் முடியாட்சிகளின் முடிவில் குடியரசின் ஆட்சி துவங்கியது. 1921-ல் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1937-ல் துவங்கிய ஜப்பானிய ஆக்கிரமிப்பு, 1945-ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் முடிவில் 1949-ல் மக்கள் சீனக் குடியரசை நிறுவினார் மா சே துங். அத்துடன் இந்த நூலும் நிறைவு பெறுகிறது.
சீனாவின் நெடிய வரலாற்றை எளிய மொழியில் சொல்கிறார் சாமிநாத சர்மா. அவரது மொழி ஓர் அன்பாசிரியரின் கரிசனம் மிகுந்தது.