Description
தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரலாற்றில் தன்னிகரற்று தனித்தன்மையுடன் கோலோச்சிய முப்பெரும் கவிஞர்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்களை எழுதும்போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பே இந்த நூல். முதன்முதலில் 'பாசவலை' படத்துக்கு பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலை அலட்சியத்துடன் வாங்கிப் படித்த எம்.எஸ்.விஸ்வநாதன் அசந்து போய்விட்டார். இதற்குத் தண்டனையாகப் பட்டினி போட்டுக் கொண்டார் எம்.எஸ்.வி. கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை' திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதிய பட்டுக்கோட்டையார், அண்ணன் படத்துக்கு தம்பி பாட்டெழுதியதற்கு பணம் எதற்கு? என்று கண்ணதாசனிடம் பணம் வாங்க மறுத்துவிட்ட தகவல் புதுசு.
'இரு மலர்கள்' படத்தில் இடம்பெற்ற 'மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்..' என்ற பாடலை தான் எழுதியதாக கவியரசர் நினைத்தார். ஆனால் அது வாலி எழுதிய பாடல் என்று தெரியவந்ததும், வாலிதான் தனது கலையுலக வாரிசு என கவியரசர் அறிவித்தார். சரியான வாய்ப்பு கிடைக்காமல் சோர்வுற்றிருந்த வாலிக்கு, கண்ணதாசனின் பாடலான 'மயக்கமா கலக்கமா...' புத்துணர்வு அளித்தது.
'கடலளவு படித்துவிட்டு கண்ணதாசன் பாடல் எழுத வந்தார். நான் கையளவு படித்துவிட்டு போட்டி போட வந்தேன்' என கண்ணதாசன் மீதான மரியாதையை வாலி குறிப்பிட்டுள்ளார். காலத்தால் அழியாத பாடல்களுக்கான பல்லவிகள் உருவான விதமும், தொழில் நேர்மையும், நட்புறவும் நூலில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.