Description
இளையோருக்கு உத்வேகமளிக்கும் 27 சுய முன்னேற்றக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூல். போட்டிகள் சூழ் உலகில் இலக்கை இலகுவாக வசப்படுத்துவதற்கான நேர்மறைச் சிந்தனைகள் பக்கங்கள்தோறும் விதைக்கப்பட்டுள்ளன.
இன்றைய இளைஞர்கள் எதையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், கவனத்தில் கொள்ள வேண்டும் என்பவை எளிய மொழி நடையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இளையோர் அறம் சார்ந்தும், மறம் மிகுந்தும் இயங்க வேண்டும். சலுகைகளால் அல்லாமல், திறமையால் முன்னேற முனைப்பு காட்ட வேண்டும். இலக்கு தனிமனித வளர்ச்சியை சார்ந்ததாக இல்லாமல், தன்னை வார்த்தெடுத்த சமூகம், தேசத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியதாகவும் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்ற விசாலமான பார்வையையும் நூல் முன்வைக்கிறது.
தலைமை என்பது நாற்காலியை வெறுமனே நிரப்புவதல்ல; அது மகத்தான ஆளுமைப் பண்பு. அந்தப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் தனி கவனம் பெறுகின்றன. வாழ்க்கை ஒரு வாய்ப்பு. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள முனைவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.