Description
பாரத நாட்டை ஆன்மிகத்திலிருந்து விலக்கி நிறுத்த இயலாது. நாடு முழுவதும் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று வழிபடுவோருக்கு கோயில்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது.
இந்நூலின் ஆசிரியர்கள், பல சிறப்புகள் வாய்ந்த ஆலயங்களைத் தரிசித்து, ஒவ்வொரு திருக்கோயிலின் அமைவிடம், செல்லும் வழி, அமைப்பு, சிறப்பு, அதனுடன் தொடர்புடைய தொன்மச் செய்திகள், ஸ்தல விருட்சம் என கோயில் தொடர்புடைய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.
ஒரு கோயிலுக்குச் சென்று அது தொடர்பான பயண அனுபவங்களை சிறு கட்டுரையாக வடிப்பதே சிரமம் எனும்போது, இத்தனை கோயில்களை நூலாசிரியர்கள் வலம் வந்திருக்கிறார்கள் என்றால் அவற்றைத் தரிசிக்க எத்தனை நாள்கள், மாதங்கள், வருடங்கள் ஆகியிருக்கும் என இந்நூலை வாசிக்கும்போது தோன்றுகிறது. திருக்கோயில்களை தரிசித்து அதன் சிறப்புகளை 384 பக்கங்களில் 28 பகுதிகளாகத் தொகுத்துத் தந்திருப்பது, "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நோக்கத்தில்தான் என்பது தெளிவாகிறது.
திருக்கோயில்களுக்கு வழிகாட்டியாக பல புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், நூலாசிரியர்களே நேரில் சென்று திருத்தலங்கள் பற்றிய அனுபவங்களை எழுதுவது திருக்கோயில்களை நேரில் சென்று தரிசித்த உணர்வை ஏற்படுத்துகிறது.