Description
‘கவிக்கோ‘’’ என்றால் அப்துல் ரகுமான், ‘பெருங்கவிக்கோ‘’’ என்றால் வா.மு. சேதுராமன் என்பது நாடறிந்த உண்மை. பெருங்கவிக்கோ அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்பட உலகளாவிய தொடர்பும் நட்பும் உள்ளவர். அவர் பலருக்கும் மடல் எழுதி இருந்தாலும் பலர் அவருக்கு எழுதிய மடலை, வாழ்த்தை, பாராட்டை தொகுத்து நூலாக்கி உள்ளார். 40ஆம் அகவையில் ஆரம்பித்து 86ஆம் அகவை வரை ஒவ்வொரு வருடமும் நூல் எழுதி வெளியிட்டு வருகிறார். 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்டது இந்நூல். ‘ஒளி காட்டும் தமிழன்’ என்ற தலைப்பிலான முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கவிதையில் தொடங்கி கவிமாமணி தமிழழகன் கவிதையில் முடிகிறது. படிக்க படிக்க வியப்பு பிரமிப்பு. இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தியடிகளுக்குச் சொன்னது பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பொருந்தும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், உலகத் தமிழர்கள் யாவரும் அய்யாவிற்கு எழுதிய மடலில் அய்யாவின் சிறப்பை, ஆளுமையை, கவியாற்றலை, மரபு ஈடுபாட்டை தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளார்.