மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
இதில் இடம் பெற்றுள்ள கல்யாணி சிறுகதையில் வரும் இளம் பெண் கல்யாணி தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர முயற்சிக்கிறாள். அரசுப் பணியில் இருக்கும் காசிநாதனுடன் திருமணம் நடக்கிறது. பிரிவும் நேர்கிறது. தந்தை வீட்டுக்குத் திரும்பும் கல்யாணி, மீண்டும் தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர நினைக்கிறாள். 'மலருக்கு மலர் தாவும் வண்டுகள் ஆண்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். பார்க்கப் போனால் பெண்கள் மட்டும் என்ன? மனித மனப் பண்பே இப்படி வளர்ந்து வருகிறது' என்று கதையை முடிக்கிறார் வல்லிக்கண்ணன்.
தெருவில் செல்லும் சந்திரனை ஒரு வீட்டில் உள்ள அக்கா, தங்கைகள் மூவரும் கவர்கிறார்கள். யாரைக் காதலிப்பது என்று தெரியாமல் விழிக்கும் சந்திரனை, அந்த சகோதரிகளின் சினேகிதி வனஜா கவர்ந்து, தன்னைக் காதலிக்கும்படி செய்கிறாள்.
வள்ளியம்மை என்ற சிறுமி வீட்டுக்குத் தெரியாமல் பஸ்ஸில் ஏறி டவுணுக்குப் போய் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்ததைச் சொல்லும் 'பெரிய மனுஷி' சிறுகதை, ஊர் முழுக்க ரவுடித்தனம் செய்து பலரையும் மிரட்டும் சிங்காரம் பிள்ளை வீட்டில் மனைவியிடம் அடங்கி நடப்பதைச் சொல்லும் 'ஆண் சிங்கம்', வீட்டில் அடிமைகளைப் போல அடங்கி வாழும் பெண்கள், வெளியே வந்துவிட்டால் எப்படி சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் 'சுதந்திரப் பறவைகள்', மனநிலை சரியில்லாத பெண்ணைப் பற்றிக் கூறும் 'ஆற்றங்கரை மோகினி' சிறுகதை என மனிதமனங்களின் துல்லியமான சித்திரிப்புகள் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எல்லாவற்றிலும் நிரம்பித் ததும்புகின்றன.
வித்தியாசமான மனநிலைகள் உள்ள ஆண்களைப் பற்றிச் சித்திரிக்கும் 'உள்ளூர் ஹீரோ', 'வஞ்சம்', 'வெளிச்சம்' போன்ற சிறுகதைகளும் உள்ளன. 50 -60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்களுடன் வாழும் வாய்ப்பை இன்றைய வாசகர்களுக்கு வழங்குகிறது இந்நூல்.