Description
பின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்தனர். செப்டம்பர் 2001 முதல் செப்டம்பர் 2005 வரை வெளிவந்த அவ்விதழில் டாடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் போன்ற பல்வகை இலக்கியக் கோட்பாடுகள் பற்றி விரிவான பல கட்டுரைகளைத் தந்திருக்கிறார் சுரேஷ். இஸங்களைப் பற்றிய போதிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை என்பதாலும், அதுபற்றிய சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இவர் எழுதிய நூல்தான் 'இஸங்கள் ஆயிரம்'. "கோட்பாடுகள் (இஸங்கள்) தமிழில் ஒதுக்கப்படுகிறது. இலக்கியத்திற்குத் தொடர்பு இல்லாதது என்று ஒதுக்கிவிடும் பொறுப்பற்ற தன்மை தமிழில் உள்ளது. உண்மையான இலக்கியம் என்பது கோட்பாடுகளை மீறி நிற்பது என நினைக்கிறார்கள். கோட்பாடு பற்றிய உணர்வு வேண்டும் என்பதால்தான் இவற்றை எழுதினேன்" என்கிறார் சுரேஷ்.

