Description
இந்து மதம் என்றால் என்ன? இந்து மதத்தின் வேத, புராண, சாத்திர, இதிகாச நூல்கள் எவையெவை? இந்து மதத்தில் உட்பிரிவுகள் எத்தனை? துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு? ஆலயம் அமைக்கும் முறை, திருவிழாக்களின் தத்துவம் என்ன - இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்துள்ளது இந்நூல்.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் இவை எல்லாவற்றைப் பற்றியும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார் நூலாசிரியர்.
கடவுள் இல்லை என்று சொல்லக் கூடிய மதங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சைவ }வைணவ பேதமும், சிவ- சக்தி பேதமும் கூடாது என்று வலியுறுத்துகிறார்.
ஆலய நிர்மாணம் குறித்த கட்டுரையில் ஆலய நிர்மாண வகைகள், செய்ய வேண்டிய கிரியைகள், குடமுழுக்கு நடத்துதல், மண்டலாபிஷேகம் செய்தல் என எல்லாவற்றையும் விவரித்திருப்பது பலருக்கும் பயன்படும்.
மரணத்தின் பின் மனிதர் நிலை என்ன என்பதை திருக்குறள், திருமந்திரம் இவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்துள்ளார். மந்திரம் என்றால் என்ன? அவற்றைக் கூறுவதால் என்ன பயன் என்பதை எளிமையாகக் கூறியுள்ளார்.
இறை அன்பர்களுக்கு இந்துமதம் குறித்த எளிய, அரிய கையேடு இந்நூல்.