Description
மயானக்கொள்ளையின்போது வலம்வரும் புகையிலைக்காரி, வில்லிசைப் பாட்டுக்காரி என்று கைவிடப்பட்ட அல்லது நமது நினைவுகளிலிருந்து மறைந்துபோன, அதிகம் பேசப்படாத மனிதர்களின் குரலைத் துல்லியமாகத் தனது ‘நீர்ச்சுழி’ கவிதைத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார் முத்துராசா குமார். இவரின் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படும் அசேதனங்களின் குரல் பிரமிப்பூட்டுகிறது. அசேதனங்களின் மகத்துவம் எளிய வரிகளில் வெளிப்படும் இடங்கள் நாம் கைவிட்ட இயற்கையின் குரலாக இருக்கின்றன. அதே தொனியில், வயதானவர்களை அடிக்கடி தன் கவிதையின் மையக்கருவாக மாற்றுகிறார். அவர்களின் கடந்த காலத்தைப் பேசுவதில்லை; மாறாக, வயோதிகத்தில் உயிர்ப்புடன் இருக்கும் நிகழ்காலத்தைப் பேசுகிறார். எல்லாவற்றையும் கைவிட்டுவிடுவோம் எனும் அச்சம் முத்துராசா குமாரின் எழுத்துகளில் எப்போதும் தென்படுகிறது. நம்பிக்கையூட்ட ஆசை ஏற்பட்டாலும் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் இடங்கள், அவர் முன்வைக்கும் அவநம்பிக்கை உண்மைதானோ என நம்மையும் நம்பவைக்கிறது.