Description
இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களின் தலைசிறந்த தமிழ்ப் படைப்புகள் எவை? அவர்களின் அரிய கருத்துகள் எவை என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது இந்த நூல்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் "சீறாப்புராணம்' என்ற காப்பியமாகப் படைத்த உமறுப்புலவர், ராமாயண ஆய்வு நூல்களைப் படைத்தளித்த நீதிபதி மு.மு. இஸ்மாயில், "அக்னிச் சிறகுகள்', "எழுச்சி தீபங்கள்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், பக்திப் பாடல்களை இயற்றிய குணங்குடி மஸ்தான் சாகிபு, தன்னம்பிக்கைத் தரும் நூல்களை எழுதிய அப்துற்றகீம், திரையிசைக் கவிஞர் கா.மு. ஷெரீப், மணவை முஸ்தபா, கவிக்கோ அப்துல்ரகுமான், எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான், இதழாளர் ஜே.எம். சாலி, பேராசிரியர் சாயபு மரைக்காயர், கவிஞர்கள் மு. மேத்தா, அப்துல் காதர், நீரை. அத்திப்பூ, மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் படைப்புகளும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
"கரிபால்டியின் வரலாற்றைப் படித்த பண்டித நேரு, கரிபால்டியை விட மேலானவராக ஆகிவிட்டார்; வாஷிங்டனின் வரலாற்றைப் படித்த ஆபிரகாம் லிங்கன், வாஷிங்டனை விட மேலான ஜனாதிபதியாக ஆகிவிட்டார்; மாணவ மணிகள் பெரியோர்களின் வரலாறுகளைப் படித்து, அவற்றிலிருந்து அறிவு மேன்மை பெற்று, அப்பெரியோர்களை விடப் பெரியோர்களாக ஏன் முயலக்
கூடாது?' என்கிற அப்துற்றகீமின் கருத்து இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமையும்!