Description
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழர் நாகரிகத்தை எடுத்தியம்பும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த ஆய்வு நூல் இது.
திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் பறம்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வே இந்தியாவின் முதல் அகழாய்வாகக் கருதப்படுகிறது.
1876- ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சாகோர், ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள், மனித எலும்புகள், மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவை பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தை அப்பகுதி மக்கள் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
அவற்றின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகம், உபைதிய நாகரிகம், சுமேரிய நாகரிகம் போன்ற பழம்பெரும் நாகரிகங்களுக்கு அடிப்படையாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் அமைந்திருப்பதாக பல்வேறு தரவுகளைக் கொண்டு கூறுகிறார் நூலாசிரியர்.
ஆதிச்சநல்லூர், சிந்துசமவெளி பண்பாட்டில் வழக்கமாக இருந்த உயிர்நீத்தோரின் இறுதிச் சடங்கில் பயன்படுத்தும் பொன்பட்டங்கள் குறித்த தகவல் இருநாகரிகங்களுக்கும் இருந்த ஒற்றுமையை எடுத்தியம்புகிறது.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்களைப் பட்டியலிட்டு, இரும்பின்றி நாகரிகம் வளர்ந்திருக்க முடியாது என இதுபோன்ற பல்வேறு தகவல்கள் மூலம் கூறுகின்றது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து இன்றளவும் பலருக்குத் தெரியாத நிலையில், இந்த ஆய்வுநூல் ஏராளமான தகவல்களுடன் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.