Description
இந்திய வரலாறும் கங்கையின் வரலாறும் பின்னிப் பிணைந்தவை. வரலாறு நெடுகிலும் கங்கை நதியின் புனிதமும் முக்கியத்துவமும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அதே நேரம், வளர்ச்சியின் போக்கில் மனிதச் செயல்களால் கங்கை நதி கடுமையாக மாசடைந்துள்ளது. கங்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிக மோசமான சூழலியல் சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளன.
ஒன்றுக்கொன்று முரணான இந்த இரு போக்குகளினூடாக கங்கை நதியின் வரலாற்றை முன்வைப்பதாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்துக்களுக்குப் பல வகைகளில் கங்கை நதி புனிதமானதாக இருப்பதும் பெளத்த, சமண எழுச்சிக் காலத்தில் கங்கை நதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் நூலில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முகலாயர்களின் படைத் தளபதி ஜாபர்கான் காஜி கங்கையைப் போற்றும் சம்ஸ்கிருத துதிகளைப் படைத்துள்ளார். காலனிய ஆட்சிக் காலத்திலும் ஆங்கிலேயர்கள் கங்கையைத் தமது நூல்களிலும் ஓவியங்களிலும் புகைப்படங்களிலும் வியப்புடன் பதிவுசெய்துள்ளனர்.
சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த கங்கை நதி பயன்படுத்தப்பட்டுள்ளது. காலனிய ஆட்சிக் காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களாலும் உணவுத் தேவைக்கும் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் கங்கையைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களாலும் கங்கை நீரின் இயல்பு மாற்றமடைந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சியானது கங்கை நீரில் பெருமளவு சாக்கடை கலப்பதற்கு வழிவகுத்துள்ளது. கங்கையை மறுசீரமைப்பதற்கான திட்டங்கள் யாவும் உரிய பலனளிக்கவில்லை.
கங்கை நீர் புனிதமானது என்னும் மரியாதையும் நம்பிக்கையும் அதைப் பாதுகாப்பதற்கு உதவவில்லை. மாறாக, அதற்கு ஆன்மிக குணாதிசயங்கள் கொண்டது என்னும் நம்பிக்கையே அதன் சீரழிவைத் தடுக்கத் தவறும் மனநிலைக்கும் வித்திட்டுள்ளதை நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆகவே, உடனடியாக எதிர்வினையாற்றிட வேண்டும் என்று இந்த நூல் வலியுறுத்துகிறது.