Description
இதிகாசத்தின் உச்சம் எனக் கருதப்படும் 'கம்பராமாயணம்' குறித்து, மதுரை கம்பன் கழகத்தில் நூலாசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். இதில் 'கம்பனும் உரையாசிரியர்களும்' எனும் கட்டுரையில் தொடங்கி, 'கம்பனில் அமரர்கள்', 'கம்பனில் சிவன்', 'கம்பராமாயணத்தில் காப்பிய அமைப்பு', 'கம்பனில் வரங்களும் சாபங்களும்' முதலிய பத்து தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையிலும் அதன் தலைப்போடு தொடர்புடைய கம்பராமாயணச் செய்திகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக, 'கம்பனும் உரையாசிரியர்களும்' எனும் கட்டுரையில் அ. குமாரசாமிப் பிள்ளை பால காண்டத்துக்கு எழுதிய உரையில் தொடங்கி, பள்ளத்தூர் பழ. பழனியப்பன் எழுதிய உரை வரையிலான பன்னிரண்டு உரையாசிரியர்களின் உரைகளில் காணப்படும் ஒப்புமையையும் வேற்றுமையையும் ஆய்ந்துள்ளார்.
'கம்பனில் அமரர்கள்' கட்டுரையில் கம்பராமாயணத்தில் இடம்பெறும் அமரர்கள் குறித்து மட்டுமல்லாது, அமரர்கள் என்போர் யாவர் என்பதை தொல்காப்பியம், பிங்கல நிகண்டு, பேரகராதி இவற்றின் துணைகொண்டு நிறுவியிருப்பது தமிழறிந்தோர்க்கு புதிய செய்திகளைத் தரக்கூடும். மேலும், தனது கூற்றுக்கு மேற்கோள்களாக திருக்குறள், புறநானூறு, ஆசாரக்கோவை, பெரியபுராணம், கந்தபுராணம், சீவக சிந்தாமணி, திரிகடுகம் முதலிய நூல்களைச் சுட்டியிருப்பது நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது.
கம்பராமாயணத்தில் ஈடுபாடு உடையோருக்கு மட்டுமல்ல, தமிழார்வலர்களுக்கும் இந்த நூல் பெரிதும் பயன்தரும்.