Description
தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கொண்டிருந்த பேரன்பின் நீட்சியாக 1933இல் ‘ஹரிஜன்’ எனும் ஆங்கில வார இதழை காந்தி தொடங்கினார். இந்திய இதழியல் வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் அந்த இதழின் தமிழாக்கம் ‘தமிழ் ஹரிஜன்’. அதன் முதலாண்டில் வெளியான 52 இதழ்களை கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன் ஆகியோர் இந்நூலில் முழுமையாகத் தொகுத்து அளித்திருக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற ‘ஹரிஜன்’ இதழை ‘தமிழ் ஹரிஜன்’ எனும் பெயரில் தமிழுக்குக் கொண்டுவந்தவர் பதிப்பாளர் சின்ன அண்ணாமலை. சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர் அவர். 1946 மார்ச்சில் காந்தி சென்னைக்கு வந்தபோது ‘தமிழ் ஹரிஜன்’ இதழைத் தொடங்கிவைத்தார். ஏப்ரல் 16, 1946இல் இந்த இதழின் முதல் பிரதியை சின்ன அண்ணாமலை வெளியிட்டார். எட்டுப் பக்கங்களைக் கொண்ட அந்த இதழின் ஆசிரியர் நாமக்கல் கவிஞர்; நிர்வாக ஆசிரியர் சின்ன அண்ணாமலை. அதன் 11ஆவது இதழில் பொ. திருகூடசுந்தரமும் ஆசிரியராக இணைந்துகொண்டார்.

