Description
க.நா.சு. வாழ்ந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய இலக்கிய எதிரிகள் மட்டுமல்லாமல், இலக்கிய நண்பர்களும் அவர்மீது தொடர்ந்து புகார் கூறியுள்ளனர். அப்படி அவருடைய இலக்கிய நண்பர் ஒருவர் கூறிய புகார், ‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை, சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை’ என்பது. இவ்வரிகளில் உண்மை சிறிதும் இல்லை என்பதை இந்நூல் ஐயமற நிரூபிக்கிறது. இதுவரை நூல்வடிவம் பெறாத அரிய கட்டுரைகளைத் தேடியெடுத்து, காலவரிசையில் அமைத்து, நேர்த்தியான தொகுப்பைத் தந்திருக்கிறார் துரை. லட்சுமிபதி. க.நா.சு.வின் ஆழமும் தெளிவும் கூடிய விமர்சனப் பார்வை பாரதி நிகழ்த்திய சாதனைகளின் மகத்துவத்தைப் புலப்படுத்துகிறது. பாரதியியல் பனுவல்களில் கவனிக்கவேண்டிய முக்கியமான புதுவரவு இத்தொகுப்பு.