Description
வீடு என்பது செங்கல்லும் மணலும் கொண்டு எழுப்பப்படுவதல்ல. மனிதர்களின் அன்பாலும் உறவுப் பிணைப்பாலும் உருவாகும் கூடு அது. அதனுள் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதோடு இந்தச் சமூகத்துடன் அவர்கள் நல்லுறவைப் பேணுவதற்கான அடித்தளத்தையும் வீடே அமைத்துத்தருகிறது. குடும்ப உறவுகளுக்குள் புரிந்துகொள்ளாமையும் சுயநலமும் சில நேரம் ஸ்வர பேதமாக அமைந்துவிடுவதுண்டு. அதை எப்படிக் கையாள்வது என்கிற வாழ்க்கை ரகசியத்தை ‘பெண்கள் ஆண்கள் குழந்தைகள்’ எனும் இந்நூலில் சொல்லியிருக்கிறார் லதா. காதல், திருமணம், கணவன் - மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு எனக் குடும்ப வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் இந்நூல் தொட்டுச் செல்கிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், உறவுச் சிக்கல்களையும் அவற்றைக் களைவதற்கான வழிகளையும் சொல்கின்றன. இந்தக் கட்டுரைகள் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடரக வெளிவந்தன. ஆண்களும் பெண்களும் தங்களைப் பகுப்பாய்ந்து தெளிவுபடுத்திக்கொள்ள உதவும் கையேடாகவும் இந்த நூல் விளங்குகிறது. பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதைத் தன் கட்டுரைகளின் வழியாக விளக்கும் லதா, ஆணாகப் பிறப்பதாலேயே ஆணுக்குத் தனியாக எந்தப் பெருமையும் வந்துவிடுவதில்லை என்பதையும் விளக்குகிறார்.