Description
நாம் விழித்துக்கொள்ள விரும்பாத கனவொன்றை இக்கவிதைகளால் உருவாக்கி அளித்திருக்கிறார் கார்த்திகா. இங்கே பரபரப்பான மாநகரச் சாலையொன்றின் நடுவே ஒரு சிறிய நீரோடை உலகை சிருஷ்டிக்கிறார். ஓடை போல முன்னோக்கியே ஓடும் காலம், ஊஞ்சல்போல பின்னோக்கியும் வந்தால் என்ன என ஏங்குகிறார். தன் கவிதைகள் மூலம் அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார். கடந்த காலத்தின் திரும்ப முடியாத உலகங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நாம் சாதாரணமாகத் தவறவிடும் உலகங்களையும், தருணங்களையும் தன் கவிதைகளில் உறைய வைத்து விடுகிறார்.
சக மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆமவடைகளையும் பரிவுடன் பார்க்கும் தருணங்கள் வழியாக சாதாரண உலகத்தின் பின்னாலிருக்கும் அதிசாதாரண உலகுக்கு ஒரு பிடி கிடைக்கிறது.
ஆமவடைகளைப் போல அரிய, பரிபூரணமான, எளிய, சின்னஞ்சிறு கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பு படிக்கத் திகட்டுவதில்லை.
- முகுந்த் நாகராஜன்