Description
பட்டினப்பாலை பற்றி, 'வாரேன் வாழிய நெஞ்சே' என்னும் இணைத்தலைப்புடன் (Parallel Title) அரிய விளக்கத்தைப் பல்வேறு முறைகளில் வகைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் படைப்பிலக்கியவாதியும் கவிஞருமான விஜயானந்தலட்சுமி. 188 பக்கங்கள் கொண்ட இந்நூலில் முதலில் முகம் காட்டுவது “நூன்முகம்”. அதனை அடுத்துவரும் இரண்டாம் பகுதி, "ஆசைகாட்டும் நெஞ்சே! வாரேன்” என்று தொடங்கி நூற் பொருளைப் பகுத்துப் பகுத்துப் பதினெட்டுத் தலைப்புகளில் வாசகர் உள்ளம் கொள்ளுமாறு மெள்ள மெள்ளப் புகட்டுகிறது. "முட்டாச் சிறப்பின் பட்டினம்” என்னும் மூன்றாம் பகுதியில் நூலின் பல்வேறு கூறுகளும் விடுபடாமல் விளக்கப்படுகின்றன. அருஞ் சொற்கள் உட்பட. சுருங்கக் கூறின் சங்க நூல் கருத்துக்களைத் தம் நடைச் சிறப்பாலும் விளக்கும் முறையாலும் வாசகர்களுக்கு எளிதில் கொண்டு வந்து சேர்க்கும் இயல்பினர் இவர். கலித்தொகை, மலைபடுகடாம் குறித்து முன்னரே இவர் ஆக்கிய நூல்கள் இதற்குச்சான்று. பேராசிரியர். ம.பெ. சீனிவாசன்