Description
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று.
அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்றவைக்கும். அவரின் வாழ்க்கை வரலாற்றைப் போன்று விரிவான வரைபடம் ஒன்றை மனதில் தீட்டத் தொடங்கி அவர் பயணித்த காலங்களுக்கும், களங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் . காலம் மாறி மாறி அச்சிதழ், இணையம், இன்ஸ்டா வரை நில்லாது ஓடிக் கொண்டேயிருக்கிறது அவரது இயக்கம்.
ஆரம்ப நேர்காணலில் ஒரு பதிலும் பிறகு ஒரு பதிலும் இல்லை… மென்மையான கசப்பையும், தீராத இனிப்பையும் ஒரே விதமாக எதிர்கொண்டிருக்கிறார். கோபமான கேள்விகளுக்கும் மறுப்பேதும் சொல்லமுடியாத காத்திரமான பதிலைத் தந்திருக்கிறார். ஒவ்வொரு நேர்காணலும் தனித்துவமானது. சித்த மருத்துவர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், பாடலாசிரியர், இயக்குனர் என அவரது வெவ்வேறு பரிமாணங்களை இதில் நாம் காணலாம்.
தமிழின் தவிர்க்க முடியாத கவிஞர்களுள் ஒருவரான குட்டி ரேவதியின் நேர்காணல்கள் வாசிப்போருக்கு புதிய திறப்புகளையும் அனுபவங்களையும் அளிப்பவையாக இருக்கின்றன.