Description
எனக்கு எழுத்து தந்த வெளி அளப்பரியது. பார்வையின் பிழையில் இருக்கும் இவ்வுலகை நீக்கமற நிறைவாகக் காண்பித்தது எழுத்து. என் சுயத்தை உணரவும் என் இருப்பை விளக்கவும் கவிதை பெரும் உதவி புரிந்தது. என் அகக்களிப்பிற்கு எழுதினேன். இப்படித்தான் வந்தது என்று இல்லை. ஆனால் எல்லாமும், என் வாழ்வில் இருந்து வந்தவை. எப்படி எங்கே என்றெல்லாம் தெரியவில்லை அது என்னைத் தேடி வந்தது. யூமாவின் பின்வரும் வழி தான் என் கவிதை பிறந்த வழியும்.
"அது வரையறுத்தலுக்கு அப்பாற்பட்டது, மிக நெருக்கடியான ஒரு சூழலில்கூட, நிற்பதற்குக்கூட இடமற்ற ஒரு பேருந்து கூட்டத்தில் பிதுங்கிப்பயணம் செய்யும் பொழுது என் கவிதை வெளியில் மிகச் சுதந்திரமாகப் பயணம் செய்திருக்கிறேன். போக்குவரத்து நெருக்கடி மிக்க ஒரு சாலையில் ஓரத்தில் ஒரு கல்லில் அமர்ந்து அழுதபடியே என் சில கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன்".
தனிமை, காழ்ப்பு, வெகுளி, துயர், அகம் என எல்லாவற்றையும் கடந்தோ அல்லது வாழ்ந்தோ கடத்திவிடும் திண்ணம் தந்தது இசையும் இலக்கியமும் தான்.