Description
இவரது கவிதைகளை வாசிக்கும் வாசகன் கோயிலுக்குள் நுழைந்தால் தன் வசமிழந்து தெய்வத்தை மறந்து தன்னைச் சுற்றியுள்ள வெளியில் காற்றில் ஆகாயத்தில் இறைமையைக் காண்கிறான். இறைமையைக் காண்பதென்பது கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையைத் தரிசிப்பது மட்டுமல்ல. பிரகார வெளியும், மாடத்திலிருந்து சடசடத்து பறக்கும் புறாக்களும், மூடுண்டு இருண்ட மனத்துள்ளும் எழும் நம்பிக்கை எனும் ஒளிக்கீற்றுப்போல கர்ப்பகிரகத்தின் கற்சானரம் வழி வானிலிருந்து சுடரும் பரிதியின் ஒளிக்கிரணங்கள் மினுக்குவதும். வலியும் வேதனையும் நிறைந்து ரணங்களால் புண்ணான நெஞ்சை நாகஸ்வர சீவானியின் வழி எழும்பும் இசையானது அசையாத மனதையும் அசைத்தசைத்து வருடும் ப்ருகாக்களாக எழும்பி ஆற்றுப்படுத்துவதும், அந்த இசைக்கேற்ப அசைந்து சுடர்ந்து ஒளிரும் நெய் தீபங்களும் என தியான அமைதியில் பரந்து விரிகிறது இறைமை.
-கே.எஸ். கருணா பிரசாத் போதிவளம்

