Description
கரிசல் நிலம் தழுவிய வாழ்வுக்கு மட்டுமல்ல, அதனை மொழியில் பதியும் இலக்கியத்திற்கும் தனித்த சிறப்புண்டு. முன்னோடிகளான கி.ரா, கு.அழகிரிசாமி ஆகியோரின் எழுத்துக்களே அப்படியொரு மகிமையை தொடங்கி வைத்தன. பொன்னுராஜ் அவர்களின் இந்நாவல் உறவுகளை மையம் கொண்டது. பாழடைந்த கோட்டைச் சுவர்களில் படர்ந்திருக்கும் பாசி வண்ணமாவதைப் போல மாவளி முழுதும் ஒருவகை நினைவுப்பாசியின் அடர்த்தி பெருகியிருக்கிறது. வெறும் கோபமும், குருதிப்பழியும் கொண்டதா அன்றாடம்? மற்றோரைக் கண்டு பொசுங்கும் மனவெக்கையை அழித்துப்போட பாவப்பட்ட மானுடரால் முடியாதா என்ன! – சம்சாரிகளின் இயல்பான வாழ்வில் வெளிப்படும் பரிசுத்தமான அன்பையெண்ணி வியக்கவே முடிகிறது. “இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது” என்கிறார் கி.ரா. அப்படியானால் கரிசல் கதைகளின் விளைச்சல் போகம் பெருகிக்கொண்டிருக்கும் என்றுதான் பொருள். அப்படியொரு அறுவடையாக மாவளியை ஏற்றுக்கொள்ளலாம்.