Description
யானை டாக்டர் கேயின் முக்கியத்துவம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் வெளிநாட்டு அறிஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் கே பற்றிப் பொதுவெளியில் விரிவான பதிவு இல்லை என்னும் குறையைத் தீர்க்கும் ஒரு முக்கியமான நூல் இது.
ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணன் என்ற முரட்டு யானையை டாக்டர் கே ஊதுகுழல் வழியாக மயக்க மருந்து செலுத்தி, மயக்கி, அடக்கிய நிகழ்வைச் சித்தரித்தபடித் தொடங்குகிறது இந்த நூல். டாக்டர் கே ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர், அதிலும் இடதுகைக்காரர் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய செய்திகள் வழியாக அவர் நம் கண்முன் திரண்டு வருகிறார். ஒரு புகை படிந்த சிறு டீக்கடையில் வன ஊழியர்களுடனும் பழங்குடியினருடனும் டீ குடித்தபின் அவர்-களுடன் பேசியபடி வரகலையாற்று முகாமை நோக்கி நடந்து செல்லும் யானை டாக்டரின் சித்திரம் இந்நூல் ஓர் எளிய வாழ்க்கைக் குறிப்பல்ல, ஓர் இலக்கிய ஆக்கம் என்று காட்டுகிறது.
டாக்டர் கே பற்றிய முழுமையான ஆளுமைச் சித்திரத்தை அளிக்கும் இந்த நூல் தமிழுக்கு ஒரு மகத்தான வரவு. மெய்யாகவே நம்முடன் வாழ்ந்த, நம் குழந்தைகள் ஒவ்வொருவரும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கும் ஓர் இலட்சியவாதியைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தமிழில் எழுதப்படுவது என்பது ஓர் அருநிகழ்வு.'
- ஜெயமோகன்

