Description
திராவிட இயக்க வரலாறு என்பது ஒரு கட்சியின் வரலாறோ, அந்தக் கட்சி நின்று நிலைகொண்டிருக்கும் நிலப்பரப்பின் வரலாறோ மட்டுமல்ல. அரசியல், சமூகம், பண்பாடு என்று வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நிலவிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு முன்னெடுத்த நூறாண்டுகாலப் போராட்டத்தின் வரலாறும்கூட.
1909-ல் உருவான சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டிருக்கும் இந்நூல், நீதிக்கட்சியின் பிறப்பு முதல் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுகவின் இருப்பு வரை நீண்டு, 2021-ல் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலம்வரை பரவுகிறது.
மொழிப்போர், திராவிட நாடு, மாநில சுயாட்சி, சமூகநீதி உள்ளிட்ட சமூக அரசியல் உரையாடல்கள் தொடங்கி ஈழம், கச்சத்தீவு, காவிரி உள்ளிட்ட அரசியல் பிரச்னைகள் வரை அனைத்து அம்சங்களையும் உள்ளும் புறமுமாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், எம்.சி.ராஜா, பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், கி.வீரமணி, ஜெயலலிதா, வைகோ, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட இயக்க ஆளுமைகளின் பங்களிப்புகள் இந்நூலில் பொருத்தமான அளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கும் அதிகமான நூல்கள், கிடைப்பதற்கு அரிதான ஆவணங்கள், சேகரிக்கப்பட்ட செய்தித்தாள்கள் ஆகியவற்றில் இருந்து காத்திரமான தரவுகளைத் திரட்டி, விரிவான ஆய்வை மேற்கொண்டு, அந்த ஆய்வின் கனம் எழுத்தில் வெளிப்படாத அளவுக்கு எளிமையான மொழிநடையில் இந்நூலை எழுதி இருக்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் ஆர்.முத்துக்குமார்.

