Description
டி. தருமராஜ் நமக்கு வழங்கியிருக்கும் ‘ஜல்லிக்கட்டு’, தமிழ் எழுத்துலகில் ஒரு நவீன உச்சம். முன்னுதாரணம் இல்லாதது. புலமை நுட்பம், ஆய்வு நுட்பம், எடுத்துரைப்பியல் நுட்பம் என அனைத்திலும் அதீத கண்திறப்புகளைக் கொண்டது. தொல்காப்பியச் சூத்திரம் மொழிக் கட்டமைப்பை விளக்கிக் காட்டுவது போல, அய்யாயிரமாண்டு தமிழ்ச் சமூகத்தின் இன்றைய அசைவியக்கத்தை ஜல்லிகட்டு என்ற சூத்திரம் மூலம் தருமராஜ் நமக்கு விளக்கிக் காட்டுகிறார். தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மன உளவெழுச்சியையும், ஜல்லிக்கட்டின் மூலம் சமகால சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தில் நிகழ்ந்த ரசாயன மாற்றங்களையும் அறிவாராய்ச்சித் தளத்தில் நின்று முனைப்பாகப் பேசுகிறார். எந்தக் கோட்பாடுகளுக்கும் இணங்காமல், சுதேசி முறையியலில் ஒரு புதிய தடத்தைக் காட்டுகிறார். நீண்ட காலம் தொடந்து கூர்மையான வாசிப்புகளை வழங்கி வந்துள்ள தருமராஜின் ஜல்லிக்கட்டை ஒரு ‘புலமை வெடிப்பு’ என்று சொல்லலாம். இந்நூலில் அசலான தமிழ்ச் சிந்தனை மரபு மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. சுதேசி முறையியல், அகவயக் கோட்பாட்டுத் தளம், துள்ளலும் எள்ளலும் மிகுந்த எடுத்துரைப்பு, யாரும் காணாத கருத்தாடல் நுண்வெளிகள், உலகளாவிய ஒப்பியல் கண்ணோட்டம் என்று நாம் கற்பனை செய்யமுடியாத பலவற்றை இந்நூலில் சாத்தியப்படுத்தியிருக்கிறார், தருமராஜ். அந்த வகையில் இது ஒரு தனிப்பெரும் நூல் மட்டுமல்ல, முதல் நூலுமாகும். இந்நூலை வாசிப்பது அறிவின் பயன்.
- மானிடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி
ஜல்லிக்கட்டு குறித்த டி. தருமராஜின் நூல், பன்னெடுங்கால தொடர்ச்சியுடைய ஒரு பண்பாட்டில், தன்னெழுச்சியாக நிகழ்ந்த மாபெரும் கிளர்ச்சியை அறிவையும் உணர்வையும் ஒரு சேரக் குழைத்து எழுதப்பட்ட பின்னை நவீன இனவரைவியலாக விரிகிறது. நூலாசிரியர் சம்பவங்களை அடர்விளக்கமாக மட்டுமே அளிக்காமல் நுட்பமாகப் புரிந்துகொள்ள கோட்பாடுகளோடு பொருத்தி, இதுவரை ஆய்வுக் களங்களில் பயன்படுத்தப்படாத, பகுப்பாய்வு, ஒப்பாய்வு, இலக்கியவியல், இனவரைவியல், கருத்துப்புலப்படுத்தவியல், உளவியல், சமயவியல், அரசியல் போன்ற கலப்பியல் (eclectic) அணுகுமுறையில் எள்ளல் ததும்ப விவரிக்கிறார். இந்த நூல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் வெறுமனே படிப்போரின் மனத்திரையில் படம்பிடித்துக் காட்டாமல் அவர்கள் ஒவ்வொருவயையுமே அந்தப் பெருநிகழ்வுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.
- மானிடவியலாளர் ஆ. செல்லபெருமாள்.

