Description
பங்குச் சந்தையில் பங்குபெற வேண்டுமா? அதற்கு முன்பு பங்குச் சந்தையை பற்றிய அடிப்படை புரிதல் அவசியம்.. எந்த ஒரு துறைக்குள் புதியதாக முதலீடு செய்வதென்றாலும் அதைப் பற்றிய சிறிய அளவிலேனும் ஆராய்ச்சி மற்றும் அறிவு வேண்டும்.. பங்குச் சந்தைக்குள் நுழைவதற்கு முன்பு படிக்க வேண்டிய சிறந்த புத்தகமாக எழுத்தாளர் கனகலட்சுமி வாசுதேவன் எழுதிய "தெரிந்த பங்குச் சந்தை தெரியாத கோணங்கள்" இருக்கும்.. அவசியம் வாசிக்கலாம்..
கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் என்ற கருத்தில் தான் ஊறிப் போயிருந்தேன்.. என் கணவர் தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய என்னை ஊக்குவித்தார்.. முதலில் நன்கு தெரிந்த, ஆடிட்டர் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தேன்.. சிறிது சிறிதாக வளரத் தொடங்கியதும் அத்துறையைப் பற்றி ஆர்வம் அதிகரித்தது.. அதைப்பற்றிய புத்தகங்களை தேடிப் படிக்கத் தொடங்கினேன்.. முதலில் முதலீடு செய்யப்போகும் நிறுவனங்களைப் பற்றி தகவல்களை எந்த கோணங்களில் அணுக வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் தான் என்னுடைய முதலீடு இப்போது இருக்கிறது என்பது இந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு புரிந்த அழுத்தம் திருத்தமான முக்கியமான விஷயம்..
முதலில் நான் தேர்ந்தெடுத்த நிறுவனத்தை சிறந்த என்று நான் குறிப்பிட்டதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் தனித்தன்மை.. "சிறந்த மற்றும் தனித்தன்மை வாய்ந்த" என்பது பற்றிய இன்னும் கூடுதலான மற்றும் தெளிவான விபரங்களை "நுழைவுத்தடை - (Economic moat)" என்ற தலைப்பில் மிக எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் எழுதியுள்ளார்.. அப்படி தேர்ந்தெடுத்த நிறுவனங்கள் தங்களுடைய தொழிலை எவ்வாறு செய்துகொண்டிருக்கிறது என்பதற்கு "முதலீட்டின் மொழி" என்ற கட்டுரை சிறப்பாக விவரிக்கிறது. அதாவது பேலன்ஸ் ஷீட், இன்கம் ஸ்டேட்மென்ட் மற்றும் கேஷ் புளோ ஸ்டேட்மென்ட் என மிக தெளிவாக விவரிக்கிறது. நிறுவனம் நிகர லாபம் நிறைய ஈட்டி இருப்பதாக இன்கம் ஸ்டேட்மென்ட் கூறினாலும் அந்த பணம் கைக்கு வந்துவிட்டதா என்பது மிக முக்கியம்.. அதை அறிய பாஸிட்டிவ் கேஷ் புளோ மற்றும் இன்வென்டரி டர்ன் ஓவர் ரேஷ்யோவும் முக்கியம் அமைச்சரே என்கிறார்.. ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தேவையான விபரங்கள் இங்கே நான் சொல்லி இருப்பது ஒரு துளி மட்டும் தான்.. அப்படி தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் எதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறார்..
இதுவரையில் முதலீடு செய்வதற்கு தேவையான தொழில் ரீதியாக புள்ளிவிவரங்களை சொல்லிவிட்டு, அந்த முதலீட்டு ஐடியா எங்கே இருந்து கிடைக்கும் என்ற ஐயம் தோன்றலாம் ? நாம் அன்றாடம் படிக்கக்கூடிய செய்தித்தாளில் இருக்கும் செய்திகளில் கூட கிடைக்கலாம் என்று உதாரணத்தை புரியும்படி எழுதி இருக்கிறார்.. இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை நாட்டு நடப்புகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்வது தான்..
வழக்கமாக பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட promotors உள்ள துறையை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வார்கள்.. அப்படி செய்தால் அந்த பங்குகளின் விலை பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதால் புதிய புதிய பங்குகளை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என்பதற்கான விளக்கமும் எழுதியிருக்கிறார்.. "Bull market" மற்றும் "bear market" பற்றிய தெளிவு கிடைத்தது..
கட்டுமானத்துறை, கேபிடல் குட்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளை வாங்குவதற்கான ஆய்வு அந்த நிறுவனத்தின் "order book" ஐ கவனிக்க வேண்டும் என சொல்லும் இவர் இதுபோன்ற பங்குகள் "Cyclical stocks" என்கிறார்.. அதேபோல "long term" முதலீடுகளுக்கு இவை உகந்தவை அல்ல என்று சொல்லும் இவர் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்போது பங்குச்சந்தையில் இவைகள் தான் மேல் எழும்பும் என்பதையும் அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார்..
பத்து நிமிடங்களில் ஒரு பங்கை தேர்ந்தெடுப்பது எப்படி ? என்ற தலைப்பில் பங்குகளை தேர்ந்தெடுக்கும் போது இவற்றின் அடிப்படையில் ஸ்டெப் பை ஸ்டெப் ஆக எப்படி வடிகட்டுவது என்பதை குறிப்பிடுகிறார்.. அதேபோல 10 நிமிடங்களில் ஒரு பங்கை வேண்டாம் என்று எப்படி நிராகரிப்பது என்பதையும் எளிமையாக கூறியுள்ளார்.. பல மடங்கு லாபம் தரக்கூடிய "multi bagger" பங்குகளை கண்டறிவது எப்படி?, பங்குகளை எப்போது வாங்க விற்க வேண்டும், போர்ட்ஃபோலியோ எப்படி கையாள வேண்டும் போன்ற விளக்கங்கள் அனைத்துமே பங்கு வர்த்தகம் செய்யக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் , தவிர்க்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லுகின்றன.. ஏற்கனவே வணிக கணிதம் ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கு இவர் சொல்லும் புள்ளிகள் மிக எளிதாக விளங்கும்..
இத்தனை நாளும் பங்குகளில் முதலீடு செய்வது என்பது பிறர் சொல்லும் நிறுவனங்களில் குறிப்பாக ஆடிட்டர்கள் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு பணம் இந்த மரத்தில் காய்க்கும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருந்தது.. அதற்கான விதையை தேர்ந்தெடுப்பது ஆடிட்டரின் வேலையாக இருந்தது. ஆனால் நம்மாலும் பணம் காய்க்கும் செடியின் விதையை தேர்ந்தெடுக்க முடியும் என்பது இந்த புத்தகத்தை படித்த பின்னர் திண்ணம்.. முதலில் படித்ததும் மேலோட்டமாக சில முக்கியமான புள்ளிகள் புரிந்திருக்கிறது.. நிறுவனங்களை தேர்ந்தெடுக்க பழக்கமாகும் வரையில் இது சிறந்த கையேடாக இருக்கும்.. சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகளை மிகவும் எளிமையான தமிழில் எழுதியிருக்கும் எழுத்தாளர் கனகலட்சுமி வாசுதேவனுக்கு நன்றிகள்...