Description
எழுத்தாளர்.ச.மோகன் இருபதாண்டுகளுக்கும் மேலான இனிய நண்பர். பெரம்பலூர் அருகே வெங்கலத்தைச் சேர்ந்தவர். சிறந்த பண்பாளர். சீரிய கதைசொல்லி. சிறுகதையில் சாதித்தவர். இவரின் " அப்பாவின் காது" இவரது கதையாற்றலை நிறுவும்.
"குருதிப்பாடு" இவரின் முதல்நாவல். பிறந்த மண்ணிலேயே நிகழும் வண்ணம் கதை நகர்கிறது. வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தும் உடல்நலக் குறைவால் செல்ல முடியாத வருத்தம். இன்று தான் குருதிப்பாட்டை வாசித்து முடித்தேன். தொடர்ச்சியான பயணங்கள், சொந்த அலுவல்களின் நெருக்கடியில் வாசிப்பு தள்ளிக் கொண்டே போனது. கதை யாரும் பேசத் துணியாத களம். குறிப்பாக ஆண்கள். பெண்ணின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்ததைப் போன்ற போதும்பொண்ணு, தெய்வானை போன்ற பெண்களின் வாழ்வை அசலாகப் பேசியிருக்கிறார் ச.மோகன். வயதுக்கு வராமல் கன்னி கழியாது தவிக்கும் போதும்பொண்ணுவின் உள்மன வாதையை வாசிப்பவருக்கும் கடத்தும் ஆற்றல் மோகனின் பலம். தடங்கலின்றி இழுத்துச் செல்கிறது நடை. போதும்பொண்ணு செங்கோடன் இடையேயான உடற்பசி, பிறகு காதலாக உருப்பெறும் இடம் மனத்தை அழுத்தமாய்த் தொடுகிறது. நாவலின் முடிவு சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்.. ஒரு பெண்ணின் வாழ்வில் சாத்தியமில்லாத முடிவெனினும் ஓர் எழுத்தாளனால் புனைவில் போதும்பொண்ணிற்கு வேறு என்ன நீதியை வழங்கிவிட முடியும்?ச. மோகனின் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன். சொல்லாமலே..திரைப்படத்தில் வரும் கதாநாயகனின் முடிவை நினைவு படுத்துகிறது எனினும் இதன் வலியும் அழுத்தமும் கூடுதலானது. பெண்கள் இதை வாசிக்கையில் பெரும் உளவியல் போராட்டத்திற்கு ஆளாகக்கூடும். மோகனின் ஆற்றலுக்கு பெரும் நாவலாக விரிந்திருக்க வேண்டிய குருதிப்பாடு குறுநாவல் தன்மையில் சுருங்கியதில் வருத்தமே. விரைவில் வேறொரு புதிய களத்துடன் பெரும் நாவலைத் தருவார் என்ற நம்பிக்கையில் குருதிப்பாட்டைக் கொண்டாடுவோம். வாசிப்பிற்குத் தீனி போடும் படைப்பு. வாழ்த்துகள் தோழர்.