Description
மாஞ்சோலை - இதில் நூறாண்டு கால வரலாறு புதைந்துகிடக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த மாஞ்சோலை மலையில் விளையும் தேயிலைத் தூளுக்கு உலக அளவில் தனித்த வரவேற்பு உண்டு. காரணம் அதற்கென்று சிறப்பு மணமும் தரமும் இருப்பதால்தான் இந்த வரவேற்பு. அப்படிப்பட்ட தேயிலையின் பின்னால் அதைப் பறித்து பதப்படுத்தி அரைத்து அனுப்பிவைக்கும் தொழிலாளர்கள் வலியும் வேதனையும் கலந்த வாழ்க்கை இருப்பதை யாரும் அறியாதது. மாஞ்சோலை எஸ்டேட்களில் மூன்று தலைமுறைகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையையும் வாழ்வில் அவர்கள் சந்தித்த வேதனைகள் பற்றியும் பதிவு செய்திருக்கும் நூல் இது. மாஞ்சோலையில் பிறந்து வளர்ந்து அந்த மலை வாழ்க்கையை அனுபவித்த இந்நூலாசிரியர், விகடன் இணையதளத்தில், ‘மாஞ்சோலை - 1349/2 எனும் நான்' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இது. வெளியுலகமே அறியாத வாழ்க்கை, ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசித்தல், வேலைக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் எதிர்கொள்ளும் விலங்குகளின் அச்சுறுத்தல், குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்தல், அதிகாரிகளின் கெடுபிடிகள், அட்டைகள் ரத்தம் குடிப்பதை அறியாமல் தேயிலை பறிக்கும் நிலை என... மாஞ்சோலையில் தேயிலைத் தொழிலாளர்களின் வேதனை கலந்த வாழ்வியலைக் காட்டுகிறது இந்த நூல். மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வலியையும் வாழ்வையும் அறியச் செல்லுங்கள்!